ADDED : ஜன 15, 2026 02:02 AM
சென்னை: தமிழகத்தில், நடப்பு ஆண்டுக்கான பொங்கல் கால பறவைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வலசை பறவைகள், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு வருகின்றன. இப்பறவைகள், மே முதல் வாரம் வரை இங்கு இருக்கும்.
இதை கருத்தில் வைத்து, வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் முதல்கட்ட நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இது மட்டுமல்லாது, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பிலும், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். மேலும், பொங்கல் பண்டிகை காலத்தில், பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
'பேர்டு கவுன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பு சார்பில், பொங்கல் கால பறவைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது; வரும், 17 வரை நடக்க உள்ளது.
பொது மக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்கலாம். தங்கள் பகுதியில், 15 நிமிடங்கள் செலவிட்டு, என்னென்ன பறவைகள் காணப்படுகின்றன என, பட்டியலிட வேண்டும்.
அந்த பட்டியலை, 'இ - பேர்டு' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பட்டியலில் உள்ள விபரங்கள் அடிப்படையில், எந்த இடத்தில், என்ன வகை பறவைகள் காணப்படுகின்றன என்ற தகவல் தொகுப்பு உருவாக்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு, www.birdcount.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

