அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : ஜன 01, 2026 11:52 AM

சென்னை: தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுத் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ 2024-2025ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க 183 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதனால், 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள். 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025ம் நிதியாண்டில் மாத குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மிகை ஊதியம் வழங்கப்படும்.
'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

