ரூ.1,000 பொங்கல் பரிசை வங்கி கணக்கில் செலுத்தலாமே! பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ரூ.1,000 பொங்கல் பரிசை வங்கி கணக்கில் செலுத்தலாமே! பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 09, 2024 02:47 AM
மதுரை: பொங்கல் பரிசு 1,000 ரூபாயை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த தாக்கலான வழக்கில், தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலை சுந்தரவிமல்நாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்புடன் பணமும் அடங்கிய பரிசுத் தொகுப்பை ரேஷன் கார்டுதாரர்களுக்கு சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது.
வரும் 2024 ஜன., 15 பொங்கலையொட்டி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு:
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் வினியோகம் துவங்கி 60 சதவீதம் முடிந்துள்ளது. 1,000 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்துமாறு யாரும் கோரிக்கை விடுக்கவில்லை.
இரண்டேகால் கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கியில் பணம் செலுத்துவதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. கடந்த காலங்களில் எவ்வித புகாரும் இல்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள்: மனுதாரர், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் மனுவை ஜன., 11க்குள் தமிழக அரசு பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு பொங்கல் பரிசுக்குரிய தொகையை நேரடியாக அல்லது வங்கி கணக்கில் செலுத்த விருப்பம் தெரிவிப்போரின் விபரங்களை, தற்போதே அரசு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.