வாய்க்கு வந்ததை விஜய் பேசுகிறார்: பொன்முடி எம்.எல்.ஏ., கிண்டல்
வாய்க்கு வந்ததை விஜய் பேசுகிறார்: பொன்முடி எம்.எல்.ஏ., கிண்டல்
ADDED : நவ 26, 2025 09:04 AM

விழுப்புரம்: த.வெ.க., விஜய், ஒரு கட்சியை துவக்கி விட்டு, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார் என, முன்னாள் அமைச்சர் பொன்முடி, கிண்டலாக கூறினார்.
அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலம் சார்பில் புதிய மற்றும் 6 புனரமைக்கப்பட்ட வழித்தட பஸ்கள் துவக்க விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற பொன்முடி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது;
விழுப்புரம் மண்டலத்திற்கு கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒதுக்கீடு செய்த 303 புதிய பஸ்களில் தற்போது வரை 72 மகளிர் விடியல் பஸ்கள், 144 புறநகர் பஸ்கள், 5 மலை வழித்தட பஸ்கள் உட்பட மொத்தம் 221 பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்காக இ யக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ள 55 புனரமைக்கப்பட்டுள்ள பஸ்களில் இதுவரை 52 பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டுள்ளது.
த.வெ.க., விஜய் ஒரு கட்சியை துவக்கி விட்டு, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார். இவரை பொறுத்தவரை அரசியலில் என்ன வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும். இதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது தெரியாமல் பேசுகிறார். சினிமா நடிகர் தானே அப்படி தான் இருப்பார்.
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் இணைந்து பணிபுரிவதால் சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

