'தி.மு.க.,வின் ஏவல் துறையாக காவல் துறை செயல்படுகிறது' : அ.தி.மு.க., எம்.பி. சண்முகம் ஆவேசம்
'தி.மு.க.,வின் ஏவல் துறையாக காவல் துறை செயல்படுகிறது' : அ.தி.மு.க., எம்.பி. சண்முகம் ஆவேசம்
ADDED : நவ 26, 2025 09:06 AM

விழுப்புரம்: தமிழக காவல் துறை, தி.மு.க.,வின் ஏவல் துறையாக செயல்படுகிறது என, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., கூறினார்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
வானுார் அருகே கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்ணை, வானுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாஸ்கரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக மகளிர் போலீசார், அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கை போலீசார், துரிதமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதித்த பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். கோவை பாலியல் சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வானுார் சம்பவத்தில் மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் மீது அவதுாறு பரப்புவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலோடு அறிவாலயம் தயாரித்ததா என்ற சந்தேகம் எழுகிறது. பாலியல் குற்றம் சாற்றப்பட்ட பாஸ்கரனுக்கு ஆதரவாக கட்சியின் மாவட்ட செயலாளர் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். தி.மு.க.,வின் ஏவல் துறையாக காவல் துறை செயல்படுகிறது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் கொடுக்கவில்லை.
இந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி வரும் 27 ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஒன்றிய, நகர, பேரூர் அ.தி.மு.க., சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
இவ்வாறு சண்முகம் கூறினார்.
எம்.எல்.ஏ., சக்கரபாணி, நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

