பொன்முடி மீதான குவாரி வழக்கு பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : பிப் 01, 2024 02:35 AM
விழுப்புரம்:முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் சாட்சிகள் ஆஜராகாததால், விசாரணை பிப். 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள அரசு செம்மண் குவாரியை கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஏலம் எடுத்து, விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில் சிலர், பிறழ் சாட்சியாக மாறினர்.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. அதனால், வழக்கின் விசாரணையை பிப்.3ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.