பொன்முடி மீதான குவாரி வழக்கு பிப்.12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு பிப்.12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : பிப் 07, 2024 01:56 AM
விழுப்புரம் :முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரைநடந்த தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உட்பட 8 பேர் மீது 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை விழுப்புரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு வரக்கோரி கவுதமசிகாமணி எம்.பி. ராஜமகேந்திரன் ஜெயச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது ஆவணங்கள் வழக்கிற்கு முக்கியமாக தேவைப்படுவதால் விரைவாக நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படி கவுதம சிகாமணி எம்.பி. ராஜமகேந்திரன் ஜெயச்சந்திரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூர்ணிமா வழக்கு விசாரணையை பிப்.12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

