ADDED : ஏப் 30, 2025 06:41 AM
சென்னை : 'துறைமுக ஆணைய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, மே 20ல் நாடு முழுதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்' என, இந்திய நீர் வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலர் நரேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
நாட்டில், 12 முக்கிய துறைமுகங்களில் செயல்படும், தொழிற்சங்க மைய குழுவான, இந்திய நீர்வழி போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின், தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்களாக, கொச்சியில் நடந்தது.
அதில், துறைமுகங்களின் வளர்ச்சி மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்கும், 'துறைமுக ஆணைய திருத்த மசோதா 2025'-ஐ, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, மே 20ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மும்பை, சென்னை, துாத்துக்குடி, கொல்கட்டா, கோவா, கொச்சின் உட்பட 12 துறைமுகங்களில் பணியாற்றும், 20,000 பேர் நேரடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

