கனமழையால் மின் நுகர்வு ஒரே நாளில் 3,500 மெகா வாட் சரிவு
கனமழையால் மின் நுகர்வு ஒரே நாளில் 3,500 மெகா வாட் சரிவு
ADDED : டிச 01, 2024 01:07 AM
சென்னை:சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ததால், நேற்று ஒரே நாளில் மட்டும், தமிழக மின் நுகர்வு, 3,500 மெகா வாட் சரிவடைந்தது.
தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட்டாக உள்ளது. கோடை வெயிலால், கடந்த மே, 2ல், 20,830 மெகா வாட்டாக, மின் நுகர்வு அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் அதிக குடியிருப்பு, வணிக நிறுவனம், தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் உள்ளன.
இதனால், மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ளது. தினமும் சராசரியாக, 2,800 - 3,000 மெகா வாட்டாக உள்ளது. கடந்த மே, 31ல், 4,769 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியது.
பின், மின்நுகர்வு குறைந்த நிலையில், தினமும் வழக்கமான அளவில் இருந்தது. இரு வாரங்களாக, பல மாவட்டங்களில் மழை பெய்வதால், நேற்று முன்தினம் தமிழக மின் நுகர்வு, 15,000 மெகா வாட் என்றளவில் இருந்தது.
இந்நிலையில், 'பெஞ்சல்' புயலால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால், பல தொழில் நிறுவனங்கள் செயல்படவில்லை. வீடுகளிலும் மின் பயன்பாடு குறைந்துள்ளது. பலத்த காற்று வீசும் இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், சென்னையின் மின்நுகர்வு நேற்று, 1,500 மெகா வாட் குறைந்தது. மாநிலம் முழுதும் ஒட்டுமொத்த மின் தேவை, 3,500 மெகா வாட் அளவுக்கு குறைந்து, 11,500 மெகா வாட் என்றளவில் சரிவடைந்து உள்ளது.

