பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கவர்னர் ரவிக்கு அழைப்பு; முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உ.பி., அமைச்சர்கள் முடிவு
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கவர்னர் ரவிக்கு அழைப்பு; முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உ.பி., அமைச்சர்கள் முடிவு
UPDATED : டிச 14, 2024 11:38 AM
ADDED : டிச 14, 2024 06:52 AM

சென்னை: 'பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தமிழகத்திலிருந்து அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும்' என, உத்தர பிரதேச அமைச்சர்கள் ரத்தோர், அசீம் அருண் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னையில் அவர்கள் அளித்த பேட்டி:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், ஆண்டுதோறும், கும்பமேளா நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகா கும்பமேளாவாக நடத்தப்படுகிறது.
அதன்படி, 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை, 45 நாட்கள் மகா கும்பமேளா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, உத்தர பிரதேச அரசும், மத்திய அரசும் செய்துள்ளன. கடந்த, 2019ல் நடந்த கும்பமேளாவில், 25 கோடி பேர் பங்கேற்றனர். இந்த மகா கும்பமேளாவில், 45 கோடி பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம்.
மற்ற நாடுகள், மாநிலங்களில் இருந்து மகா கும்பமேளாவுக்கு வருபவர்களுக்கு வசதியாக, அதிக விமானங்கள் வந்து செல்லும் வகையில், பிரயாக்ராஜ் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும், 13 ஆயிரம் முறை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன; 7,000 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும், மாற்று பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவில் பங்கேற்க, தமிழக கவர்ன ரவிக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளோம்.
முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். தமிழகத்திலிருந்து அதிகமானோர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.