முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு!
முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு!
UPDATED : ஜூலை 31, 2025 12:28 PM
ADDED : ஜூலை 31, 2025 11:08 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்தித்து நலம் விசாரித்தனர். இதற்கு, ''நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி!'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஜூலை 21ம் தேதிக்கு முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அவர் அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டது. பின்னர் டாக்டர்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 31) முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்தித்து நலம் விசாரித்தனர். இதற்கிடையே, டாக்டர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பின், இன்று (ஜூலை 31) முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் சேர தேமுதிக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர், முதல்வரை நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
நட்பு ரீதியாக...!
முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு குறித்து, நிருபர்கள் சந்திப்பில் பிரேமலதா கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினை நட்பு ரீதியாக சந்தித்தேன். முதல்வர் ஸ்டாலினுடன் விஜயகாந்துக்கு 45 ஆண்டு கால நட்பு. விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்து வந்தேன்.
யாருடன் கூட்டணி என்று தற்போது கூற முடியாது. கூட்டணி பற்றி நேரம் வரும்போது அறிவிப்பேன். முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் 100 சதவீதம் அரசியல் காரணங்கள் இல்லை. இவ்வாறு பிரேமலதா கூறினார்.