அதிகாரிகள் மீது மோத முயன்ற தனியார் பஸ்; சேசிங் செய்து பறிமுதல்; ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
அதிகாரிகள் மீது மோத முயன்ற தனியார் பஸ்; சேசிங் செய்து பறிமுதல்; ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : டிச 27, 2024 08:52 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூருக்கு செல்லாமல் பைபாஸ் வழியாக திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ்சை மடக்கிய போக்குவரத்து அதிகாரிகளை மோத முயன்ற பஸ்சை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் டு மதுரை, மதுரை டு திண்டுக்கல்லுக்கு பயணிகளை ஏற்றி வரும் பஸ்கள் கொடைரோடு அருகே உள்ள அம்மைநாயக்கனூருக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி வர வேண்டும். ஆனால் சில பஸ்கள் அதிக ட்ரிப்புகளை அடிக்க வேண்டும் என்பதற்காக அம்மையநாயக்கனூருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக திண்டுக்கல், மதுரை செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த நிலையில், அனைத்து பஸ்களும் உள்ளே சென்று வர வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதை கண்காணிக்க நேற்று பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அம்மையநாயக்கனூர் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகளுடன் வந்த தனியார் பஸ் அம்மையநாயக்கனூருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக திண்டுக்கல் வர முயன்றது. போக்குவரத்து அதிகாரிகள் அந்த பஸ்சை மடக்கி அபராதம் விதிக்க முயன்றனர். அப்போது, டிரைவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காமல் அவர்கள் மீது மோத முயன்று மீண்டும் பஸ்சை எடுத்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை பைபாஸ் ரோட்டில் விரட்டிச் சென்று, நடுரோட்டில் மறித்து பஸ்சை பறிமுதல் செய்தனர். பிறகு, அம்மைநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். ரூ.1லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

