தனியார் பள்ளி கட்டண நிர்ணயம் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
தனியார் பள்ளி கட்டண நிர்ணயம் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
ADDED : ஜன 25, 2026 05:47 AM
சென்னை: தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் செய்வதை முறைப்படுத்தும் வகையில், சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 2009ம் ஆண்டு பள்ளி கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய, அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான மசோதா, நேற்று சட்டசபையில் நிறைவேற்றப் பட்டது.
தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் நியாயமானதாவும், நேர்மையான கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே விதிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில், திருத்தங்களை செய்ய வேண்டும் என, பா.ம.க., - ஜி.கே.மணி, வி.சி., - ஷா நவாஸ், மார்க்சிஸ்ட் - நாகை மாலி, த.வா.க., - வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்து, அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
தனியார் பள்ளிகள் நினைத்தால், நாளை கூட கட்டணத்தை உயர்த்தி கொள்ள முடியும்.
அதை முறைப்படுத்தும் வகையில், இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு, இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
கட்டண நிர்ணய குழு முடிவுக்கு எதிராக, கருத்துகளை தெரிவிப்பதற்கு காலவரம்பு, 30 நாட்களாக நிர்ணயம் செய்ய முன்மொழியப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட பள்ளிகளின் கட்டண நிர்ணயம் தொடர்பான அதிகாரம், மத்திய அரசிடம் உள்ளது. அது, நமது அரசிடம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

