ADDED : மார் 06, 2024 11:42 PM
சென்னை:மதுரை காமராஜ் பல்கலையின் ஆசிரியர், பணியாளர் சம்பளத்துக்காக, தமிழக அரசு, 30.26 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதேநேரம், அரசின் நிதிக்குழு ஒப்புதல் இன்றி யாருக்கும் பதவி உயர்வு வழங்கக் கூடாது என, அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திக் பிறப்பித்த அரசாணை விபரம்:
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய வகைக்கு, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்துக்காக, 22.58 கோடி ரூபாயை மதுரை பல்கலை கேட்டுள்ளது.
இதை அரசு பரிசீலித்து, 30.26 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. இதில், இந்த ஆண்டு பிப்ரவரி மாத சம்பளத்தையும் வழங்க வேண்டும்.
அதேநேரம், சில நிபந்தனைகளை பல்கலை நிர்வாகம் பின்பற்ற வேண்டும். தணிக்கைத்துறை ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு, பென்ஷன் தொகை, ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சம்பளம் போன்றவை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
சில ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம், உரிய கல்வித் தகுதியின்படி மேற்கொள்ளப்படவில்லை. அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் நிதி குழுவில் ஒப்புதல் பெறாமல், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

