அரசு உத்தரவு பிறப்பித்தும் மறுக்கப்படும் பதவி உயர்வு; 4 ஆண்டுகளாக குமுறும் கல்லுாரி ஆசிரியர்கள்
அரசு உத்தரவு பிறப்பித்தும் மறுக்கப்படும் பதவி உயர்வு; 4 ஆண்டுகளாக குமுறும் கல்லுாரி ஆசிரியர்கள்
ADDED : பிப் 16, 2025 10:30 PM

மதுரை : தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தும் பதவி உயர்வு வழங்காததால் அரசு கல்லுாரிகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனனர்.
'அரசு கல்லுாரி ஆசிரியர்களில் இணைப் பேராசிரியர் பணி நிலையில் 3 ஆண்டுகளை நிறைவு செய்தவர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்' என யு.ஜி.சி., 2018 ல் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தமிழக கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்குவது குறித்து 2021, ஜனவரியில் அரசு உத்தரவிட்டது. ஆனால் 4 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை பதவி உயர்வு வழங்கவில்லை. இதனால் பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதுடன், மாணவர்கள் நலன் சார்ந்த பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக ஒரு இணைப் பேராசிரியர் 6 மாணவர்களுக்கு மட்டுமே பிஎச்.டி., வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால் பேராசிரியராக பதவி உயர்வு கிடைத்தால் அவர் 8 மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட முடியும். இதன் மூலம் பிஎச்.டி., படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
இதுதவிர துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெறுவதற்கும், துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கும் பேராசிரியர் நிலை அடிப்படை தகுதியாக உள்ளது. 4 ஆண்டுகள் பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருவதால் பலர் இதுபோன்ற வாய்ப்பை தவறவிட்டு தவிக்கின்றனர்.
இதுகுறித்து அரசு கல்லுாரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இப்பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 2500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு வழங்கப்பட்டால் ஒருவருக்கு ரூ.1400 மட்டுமே அடிப்படை சம்பளம் உயரும். கூடுதல் நிதிச் செலவினம் ஏற்படாது. எனவே இனியும் மறுக்காமல் உடன் பதவி உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.