சொத்துவரி உயர்வு திருத்தம்; அமைச்சர் நேரு விளக்கம்
சொத்துவரி உயர்வு திருத்தம்; அமைச்சர் நேரு விளக்கம்
ADDED : ஆக 25, 2025 01:01 AM

கோவை;''சொத்து வரி உயர்வு குறித்து முழுமையான தகவல்களை தெரிவித்தால் அதனை திருத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்று தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா சாலையில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தை தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செம்மொழி பூங்காவுக்கு ஏற்கனவே ஒதுக்கிய நிதியை காட்டிலும் கூடுதலாக, 50 கோடி வேண்டும் என்று கேட்டனர். முதல்வரின் உத்தரவுக்கிணங்க நிதியை ஒதுக்க ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன்.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தர ஹாக்கி மைதானத்தையும், கவுண்டம்பாளையம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெள்ளலூர் குப்பை கிடங்கில், 70 கோடியில் பயோமைனிங் முறையில் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படும்.
கோவையில், ரூ. 250 கோடி மதிப்பில் 'வேஸ்டபிள் எனர்ஜி' பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை துவக்க உள்ளேன்.
பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சொத்து வரி குறைவு, 600 சதுர அடிக்கு கீழ் உள்ளதற்கு எந்த ஒரு வரியும் கிடையாது. வரி உயர்வு என்பது ஏற்கனவே விதிக்கப்பட்டது.
புதிதாக எந்த வரியையும் உயர்த்தவில்லை. யாருக்கு வரி உயர்வு என்பது குறித்து முழுமையான தகவல்களை தெரிவித்தால் அதனை திருத்திக் கொள்ள நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.