மலையில் மாடுகளை மேய்த்த சீமான்; தடையை மீறி போராட்டம்
மலையில் மாடுகளை மேய்த்த சீமான்; தடையை மீறி போராட்டம்
UPDATED : ஆக 04, 2025 04:57 AM
ADDED : ஆக 04, 2025 04:55 AM

போடி : “கல் குவாரிகள் அமைத்து, வெடி வைத்து தகர்க்கும்போது, மலைப்பகுதியில் ஏற்படாத பாதிப்பு, மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றால் மட்டும் எப்படி பாதிக்கப்படும்?” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் கூறினார்.
தேனி மாவட்டம் போடியை அடுத்த முந்தல் அருகே, அடகுபாறை மலைப்பகுதியில், நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற சீமான், கட்சி தொண்டர்களுடன் மலைப்பகுதியில் மாடுகளை ஓட்டிச் சென்றார்.
![]() |
போராட்டத்தில் பங்கே ற்ற கட்சியினரும், மலையில் மாடு மேய்ப்பவர்களும் சேர்ந்து, வனத் துறையினரின் தடுப்புகளை அகற்றி விட்டு, கூட்டமாக மாடுகளுடன் சென்றனர்.
போராட்டத்துக்கு பின் சீமான் கூறியதாவது:
மலையில் கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கும்போது, கால்நடைகள் மேய்ச்சலுக்கு மட்டும் ஏன் அனுமதி கொடுப்பது இல்லை? தேனி மாவட்டத்தில், ஒரு லட்சமாக இருந்த மலை மாடுகள் எண்ணிக்கை, தற்போது 15,000 ஆக குறைந்து விட்டன. இதனால், மாடு மேய்க்கும் தொழிலாளர்களின் நிலை சிரமமாகி உள்ளது. மலைப்பகுதியில் மாடுகள் மேய்க்கக்கூடாது என்றால், மாற்று இடம் வழங்க வேண்டும்.
![]() |
மாடுகள் மேய்வதால் மலையில் தீப்பிடிப்பது தவிர்க்கப்படும். காடுகளை வெட்டி ரோடு அமைத்து விட்டு, சுற்றுச்சூழல் குறித்து பேசுவது வியப்பாக உள்ளது.
ஆடு, மாடுகளின் சாணம், சிறுநீர் உரமாக பயன்படுகிறது. அதனால், வனப்பகுதி வளமாகிறது. அடுத்தகட்டமாக, கன்னியாகுமரி அருகே உள்ள மகேந்திரகிரி மலைப்பகுதியில், இதே மாதிரியான போராட்டம் தொடரும். இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில் சீமான் உட்பட 50 பேர் மீது வனத்தில் அத்துமீறி நுழைந்தது, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகிய குற்றத்திற்காக வனத்துறையினர் வழக்குப் பதிந்தனர்.