பொது வெளியில் எதிர்ப்பு; திரை மறைவில் ஆதரவு தி.மு.க., இரட்டை வேடம்: பழனிசாமி பாய்ச்சல்
பொது வெளியில் எதிர்ப்பு; திரை மறைவில் ஆதரவு தி.மு.க., இரட்டை வேடம்: பழனிசாமி பாய்ச்சல்
ADDED : செப் 28, 2024 02:33 AM
சென்னை,:'பொது வெளியில் மத்திய அரசை எதிர்ப்பதும், தன் குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகள் நலன்களை பாதுகாக்க, திரை மறைவில் ஆதரவு என, தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை துறைமுகத்தில், 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ 'சூடோ எபிட்ரின்' என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்; இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும், வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட தி.மு.க.,வின் அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் என செய்திகள் வருகின்றன. தி.மு.க., ஆட்சியில் சமூக விரோத சக்திகளும், ஆளும் தரப்பினரும் பிரிக்க முடியாத அளவு ஒட்டி உறவாடுவது, தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு கைதாகி, ஜாமினில் வெளிவரும் தன் கட்சிக்காரர்களுக்கு, முதல்வரே தியாகிகள் பட்டம் வழங்குவதால், சமூக விரோத சக்திகள் அனைவரும் தெம்புடன் வலம் வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல.
பொது வெளியில் மத்திய அரசை எதிர்ப்பதும், தன் குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகள் நலன்களை பாதுகாக்க, திரை மறைவில் ஆதரவு என, தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகம், தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு, காரணமானவர்கள் யார் என்பது நன்கு தெரிந்திருந்தும், அவர்கள் மீது சட்டத்தின் இரும்புப்பிடி நீளவில்லை. அதற்கு பதிலாக, சிறு சிறு கடத்தல் வேலை செய்யும் சிலரை மட்டும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கின்றனர். இதன் மர்மம் என்ன என மக்கள் குழம்பி போய் உள்ளனர்.
இனியாவது தி.மு.க., அரசு, தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, சமூக விரோத சக்திகளை ஊக்குவிக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு தடுக்க, அரசியல் தலையீடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'அரசின் அலட்சியப்போக்கு'
சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றிய, தி.மு.க., அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்கு உரியது. இனியும் அலட்சியம் காட்டாமல், தமிழகத்தில் இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும்.
- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்