அவதுாறாக பேசினால் போராட்டம்: முதல்வருக்கு உதயகுமார் எச்சரிக்கை
அவதுாறாக பேசினால் போராட்டம்: முதல்வருக்கு உதயகுமார் எச்சரிக்கை
ADDED : ஏப் 14, 2025 05:41 AM

சென்னை : “அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்து அவதுாறாகப் பேசினால், தமிழகம் முழுதும் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க தயங்க மாட்டோம்,” என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார், முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவானது, அ.தி.மு.க., நிர்வாகிகளில் ஒருசிலர் தவிர, பெரும்பாலானோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும் என, கட்சியினர் நம்புகின்றனர்.
இந்நிலையில், அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள் கூறியிருப்பதாவது:
முன்னாள் அமைச்சர் செம்மலை: பலமான பகைவர்களை எதிர்கொள்வதற்கு, வலுவான நண்பர்கள் தேவைப்படுகின்றனர். இது, தமிழக அரசியலுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசை வீழ்த்த, சரியான கூட்டணியை பழனிசாமி கட்டமைப்பார்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார்: அ.தி.மு.க., - பா.ஜ., வெற்றிக் கூட்டணியை, பழனிசாமி அமைத்துள்ளார். இதை கண்டு ஆளும் தி.மு.க., அரசு நடுங்கி போயிருக்கிறது.
அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி, குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சியை தொடரலாம் என, ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருந்தார்.
அவரது தலையில் இடி விழுவதுபோல், கூட்டணி அறிவிப்பு வெளியாகி உள்ளது. தி.மு.க., அரசு சூழ்ச்சி, சூது, நயவஞ்சகம் போன்றவற்றை மூலதனமாக வைத்து, தமிழக மக்களை ஏமாற்றி, விளம்பர வெளிச்சத்தில் விளையாடி கொண்டிருந்தது.
தற்போது உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்ல, அ.தி.மு.க., தலைமையில் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கூட்டணி ஊழல் சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஆளும் வரிசையில், அ.தி.மு.க., விரைவில் அமரும். பழனிசாமி முதல்வராக அமர்ந்து, திட்டங்களை வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வலிமையான, சரித்திரம் படைக்கும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத வஞ்சகர்கள், வசைபாடுவதில் ஆச்சரியமில்லை.
முதல்வர் ஸ்டாலின் தலையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அறிவிப்பு இடியாக இறங்கி உள்ளது. இதனால், கூட்டணி குறித்து அவரது கட்சியினர் அவதுாறு பேசுகின்றனர்.
இனிமேலும் கூட்டணி குறித்து அவதுாறாகப் பேசினால், தமிழகம் முழுதும் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க தயங்க மாட்டோம்.
கூட்டணியை ஆரோக்கியமாக விமர்சிக்க வேண்டும். அரசியல் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது, தமிழக அரசியலுக்கு உகந்ததல்ல.
பழனிசாமி தலைமையில் அமைந்துள்ள கூட்டணி, சட்டசபை தேர்தலில் சரித்திரம் படைக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

