ADDED : மே 16, 2025 02:43 AM

திருக்கோவிலுார்:அரகண்டநல்லுார் பகுதியில் மின் வினியோகம் தடைபட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் துணை மின் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் அரகண்டநல்லுாரின் குறிப்பிட்ட பகுதி வரை மின் வினியோகம் வழங்கப்படுகிறது. நேற்று இப்பகுதியில் உள்ள, சில மின்கம்பங்களில், இன்சுலேட்டர்கள் வெடித்து சிதறின.
மின் ஊழியர்கள் நேற்று இரவு 8:00 மணி வரை, பாதிப்புகளை கண்டறிந்து சரி செய்து வந்தனர். இதனால் இந்த வழி தடத்தில் மின் வினியோகம் தடைபட்டது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அரகண்டநல்லூர், கோதண்டபாணிபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி தலைவர் அன்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் குமரேசன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த சில மணி நேரங்களில் மின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 9:45 மணிக்கு அப்பகுதியில் மின் வினியோகம் சீரானது