சட்டவிரோத மணல் விற்பனை விவகாரம்: ஐகோர்ட்டில் பொதுத்துறை செயலர் ஆஜர்
சட்டவிரோத மணல் விற்பனை விவகாரம்: ஐகோர்ட்டில் பொதுத்துறை செயலர் ஆஜர்
ADDED : நவ 30, 2024 12:15 AM

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை விவகாரத்தில், கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், பொதுத்துறை செயலர் நேற்று ஆஜரானார்.
மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருவாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், புகார் எழுந்தது.
இதுகுறித்து, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராகும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை, 'சம்மன்' அனுப்பியது.
இதை எதிர்த்து, பொதுத்துறை செயலர், நீர்வளத்துறை கூடுதல் செயலர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலுார் மற்றும் வேலுார் மாவட்ட கலெக்டர்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.
மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கு மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.
அதனால், அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்திருந்த தமிழக பொதுத்துறை செயலரை ஆஜராகும்படி உத்தரவிட்டனர். அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் ஆஜரானார்.
இதன்பின், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதாடியதாவது:
நேற்று முன்தினம் எவரும் ஆஜராகாததற்கு மன்னிப்பு கோருகிறோம். பண மோசடி விவகாரங்களில் அமலாக்கத்துறையுடன் இணைந்து செயல்பட, மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால், பழிவாங்கும் நோக்குடன் வழக்குகள் இருக்கக்கூடாது.
மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில், அரசின் ஒப்புதல் இல்லாமல், அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரம், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும்.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட நகர்வு பற்றி, பொதுத்துறை தேவையான சட்ட ஆலோசனைகளை பெற, அவகாசம் வழங்க வேண்டும். விசாரணையை தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.
அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர், அடுத்த முறை, பொதுத்துறை செயலர் ஆஜராகுவதில் இருந்தும் விலக்களித்தனர்.