ADDED : பிப் 22, 2024 02:29 AM

சென்னை:'தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை -- 2024'ஐ, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ள தாவது:
சமூக நலத்துறை சார்பில், மாநில மகளிர் கொள்கை தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில் சமூக நீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றின் அடிப்படையில், இம்மாநில மகளிர் கொள்கை உருவாக்கப் பட்டு உள்ளது.
இக்கொள்கை, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்து புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். இக்கொள்கையை ஐந்து ஆண்டுகளுக்கு பின், மறு ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
குறிக்கோள்கள்
பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல்; பெண் குழந்தைகளின் இடை நிற்றல் விகிதத்தை குறைத்தல்
வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்
வேலை வாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்
அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல்
பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்
பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளை பெற, 'டிஜிட்டல்' கல்வி அறிவை ஊக்குவித்து, டிஜிட்டல் பாலின இடைவெளியை குறைத்தல்
தொழில் துறையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குவதன் வழியே, மகளிர் இடையே நிலவும் திறன் இடைவெளியை குறைத்தல்
நிறுவன கடன் வசதிகளை அணுகுதல்; தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைக்க வழிவகை செய்தல்
அரசியல் களத்தில் மகளிர் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்
செயலாக்கம் எப்படி?
அரசில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் பங்கு தாரர்களின் பங்கேற்பின் வழியே, முன் முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி, இந்த கொள்கையின் நோக்கத்தை அடைய வழிவகை செய்யப் படும்
இக்கொள்கையில் இணைந்துள்ள துறைகள், தங்கள் திட்டங்களை, கொள்கையின் நோக்கங்களுடன் இணைந்து உருவாக்க வேண்டும்
இக்கொள்கை செயல்படுத்தப்படுவதை சமூக நலத்துறை கண்காணிக்கும். சமூக நலத்துறை இயக்குனரக அலுவலகத்தில், 'செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு அலகு' அமைக்கப்படும்
தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட அளவிலான பெண்கள் உரிமைக் குழு, தொடர்புடைய பிற துறைகளுடன் இணைந்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, மாநில மகளிர் கொள்கையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்க வேண்டும்
கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கொள்கையின் செயலாக்கத்தை கண்காணித்து, சவால்களை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சமூக நலத்துறை செயலர்ஜெயஸ்ரீ முரளீதரன், கமிஷனர் அமுதவல்லி மற்றும் அலுவலர்கள்பங்கேற்றனர்.