போலி மருந்துகள் குறித்து புகாராளிக்க 'க்யூ ஆர்' குறியீடு
போலி மருந்துகள் குறித்து புகாராளிக்க 'க்யூ ஆர்' குறியீடு
ADDED : டிச 24, 2025 06:06 AM

சென்னை: 'தரமற்ற, போலி மருந்துகள் குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க, மருந்தகங்களில் 'க்யூ ஆர்' குறியீடை காட்சிப்படுத்த வேண்டும்' என, மருந்து கடை உரிமையாளர்களுக்கு, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட, இருமல் மருந்தால், மத்திய பிரதேச மாநிலத்தில், குழந்தைகள் உயிரிழந்தன. அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும், போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடு முழுதும், போலி மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகளால், பொதுமக்கள் ஒவ்வாமை மற்றும் உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க, நாடு முழுதும் அனைத்து மருந்தகங்களிலும், 'க்யூ ஆர்' குறியீடை காட்சிப்படுத்த வேண்டும் என, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம், கடந்த மாதம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து, மருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள் குறித்து புகார் தெரிவிக்க, புதிய செயலியை, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது. இதன் வாயிலாக, 'க்யூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும், தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
அவற்றை அனைத்து மருந்தகங்களின் முகப்பிலும், பொதுமக்கள் எளிதில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த, மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இனி, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு பாதிப்பு குறித்து, 'க்யூ ஆர்' குறியீடு வாயிலாக, பொதுமக்கள் அளிக்கும் புகாரில், உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் மற்றும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

