டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் வீடுகளில் மீண்டும் ரெய்டு!
டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் வீடுகளில் மீண்டும் ரெய்டு!
UPDATED : மே 17, 2025 02:05 AM
ADDED : மே 16, 2025 11:31 PM

சென்னை : மதுபானங்கள் விற்பனை மற்றும் கொள்முதலில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில், 'டாஸ்மாக்' நிர்வாக இயக்குநர் விசாகன் உட்பட உயர் அதிகாரிகளின் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் 'ரெய்டு' நடத்தினர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மார்ச் 6 முதல், 8ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.என்.ஜே., உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விசாரணை
அப்போது, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து, 'டெண்டர்' ஒதுக்கீடு ஆணைகள், மதுபான விலை நிர்ணய கடிதங்கள், மதுக் கூடம் உரிமம் வழங்குவது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.
அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளில், மதுபான ஆலைகளில் இருந்து கடைகளுக்கு மது பாட்டில்களை எடுத்துச் செல்வதற்கான வாகன டெண்டர் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, பாட்டிலுக்கு, 10 - 30 ரூபாய் வரை கொள்முதல் விலையை உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விசாகன், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா, கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதிசங்கர், சில்லரை விற்பனை பிரிவு பொது மேலாளர் ராமதுரைமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
மூவரின் மொபைல் போன்கள், இ - மெயில் தகவல்களையும் ஆய்வு செய்தனர்.
சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, விசாகன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.
வழக்கு தள்ளுபடி
இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானதாக அறிவிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை என்றும் கூறி விட்டது.
இதையடுத்து, சென்னை மணப்பாக்கம், சி.ஆர்.ஆர்.புரம் பகுதியில் உள்ள விசாகன் வீட்டில், நேற்று காலை 6:00 மணியில் இருந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அவரது வீட்டிற்கு வெளியே மறைவான இடம் ஒன்றில், ஆவணங்கள் கிழித்து எறியப்பட்டு கிடந்தன. அவற்றையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
'பார் டெண்டர்' விவகாரம் தொடர்பாக, 'வாட்ஸாப் சாட்டிங்' மற்றும் இ - மெயில் தகவல் பரிமாற்றம் குறித்து, 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்கப்பட்டு, அதை காகித வடிவில் பிரின்ட் எடுத்து உள்ளனர். அவற்றை தான் கிழித்து வீசி எறிந்துள்ளனர் என்பதை கண்டறிந்தனர்.
பல கேள்விகள்
இந்த ஆவணங்கள், விசாகன் மொபைல் போன் மற்றும் இ - மெயில் முகவரியில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், விசாகனை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அமலாக்கத்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது, மதுபானங்கள் கொள்முதல், டாஸ்மாக் மதுக்கூடம் உரிமம், பணியிட மாறுதல் தொடர்பாக, முக்கிய புள்ளிக்கும், அவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்து, பல கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. விசாகனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது, அவரது மனைவி மற்றும் மகனிடமும், அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அதேபோல, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள, எஸ்.என்.ஜே., மதுபான நிறுவனத்தின் அலுவலகம், அண்ணா சாலையில் தொழிலதிபர் தேவகுமார் வீடு, பெசன்ட் நகரில் ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள தொழிலதிபர் மேகநாதன் வீடு உட்பட, 10 இடங்களிலும் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.