ADDED : மார் 11, 2024 04:10 AM

சென்னை : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை, போலீசார் கைது செய்தனர்.
டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த, எஸ்.கே.எம்., அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. தமிழகத்தில் சென்னை, சேலம் உட்பட 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நேற்று ரயில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூரில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், 15க்கும் மேற்பட்ட விவசாயிகள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். போலீசார் அனுமதிக்க மறுத்ததால் சாலையில் அமர்ந்தனர்.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக, தமிழக காவல் துறை செயல்படுவதாக பாண்டியன் குற்றம் சாட்டினார். போலீசார் அவர்களை ரயில் நிலையம் உள்ளே அழைத்து சென்றனர். அவர்கள் ரயில் முன் அமர்ந்து சிறிது நேரம் கோஷமிட அனுமதித்தனர். பின் கைது செய்தனர்.
