ADDED : நவ 28, 2024 01:12 AM
சென்னை:மாற்றுத்திறனாளி பயணியர், ரயில்வே சலுகை அடையாள அட்டையை எளிதாக பெற, புதிய இணையதள வசதியை ரயில்வே அறிமுகம் செய்து உள்ளது.
ரயிலில் பயணம் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு, 75 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
கடந்த காலத்தில் அரசு மருத்துவர் வழங்கும் மருத்துவ சான்றிதழை பயன்படுத்தி, சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு அடையாள அட்டை பயன்படுத்தும் முறை அமலுக்கு வந்தது.
இதை பெற, கோட்ட ரயில்வே அலுவலகங்களுக்கு சென்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். பரிசீலனைக்கு பிறகு, அடையாள அட்டை வழங்கப்படும்.
தற்போது மாற்றுத் திறனாளிகள், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அடையாள அட்டை பெற, புதிய இணையதள வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்து உள்ளது.
இதில் அடையாள அட்டை பெற, மாற்றுத்திறனாளிகள் தேவையான சான்றிதழ்களை, https://divyangjanid.indianrail.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய பரிசீலனைக்கு பிறகு, அடையாள அட்டை, இணையதளம் வாயிலாக வழங்கப்படும்.
அதை பயன்படுத்தி, ரயில்வே டிக்கெட் பதிவு அலுவலகங்கள் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தவிர, டிக்கெட் பதிவு அலுவலகங்கள் மற்றும் யு.டி.எஸ்., செயலி வாயிலாக, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம் என, ரயில்வே அறிவித்து உள்ளது.