530 பேருக்கு பணி நிரந்தரம் கோரி ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
530 பேருக்கு பணி நிரந்தரம் கோரி ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
ADDED : செப் 26, 2025 02:40 AM

சென்னை:தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வரும், 530 கடைநிலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, டி.ஆர்.இ.யு., சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தெற்கு ரயில்வேயின் கீழ் பல்வேறு பிரிவுகளில், 530 பேர், கடந்த 15 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
பணி நிரந்தரம் செய்யாததால், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதில்லை.
எனவே, அவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, டி.ஆர்.இயு., எனப்படும் தட்ஷிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து, டி.ஆர். இ.யு., பொதுச்செயலர் ஹரிலால் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, 530 பேர் சப்ஸ்டிடியூட் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை இன்னும் நிரந்தரம் செய்யவில்லை.
இதனால், அவர் களுக்கு பதவி உயர்வும் இல்லை. துறைவாரி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியவில்லை. சீனியாரிட்டி உள்ளிட்ட உரிமைகள் அனைத்தும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
பலமுறை முறையிட்டும், உச்ச நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, ரயில்வே நிர்வாகம் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். தாமதமின்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உண்ணா விரதம் இருந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.