'பிங்க் புக்' வெளியிடவில்லை ரயில்வே அதிகாரிகள் தவிப்பு
'பிங்க் புக்' வெளியிடவில்லை ரயில்வே அதிகாரிகள் தவிப்பு
ADDED : பிப் 16, 2025 12:29 AM
சென்னை: மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கு, 2.65 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக ரயில் திட்டங்களுக்கு மட்டும், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 2ம் தேதி தெரிவித்தார்.
ஆனால், எந்ததெந்த மாநிலங்களுக்கு, எவ்வளவு நிதி, திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய, 'பிங்க் புக்' எனப்படும் ரயில்வே புத்தகத்தை இன்னும் ரயில்வே துறைவெளியிடவில்லை.
எனவே, எந்தெந்த திட்டங்களுக்கு நிதி போன்ற விபரங்களை, அறிந்து கொள்ள முடியாமலும், பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்க முடியாமலும், ரயில்வே மண்டல அலுவலக அதிகாரிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிவித்த, ஓரிரு நாட்களில், 'பிங்க் புக்' வெளியிடப்படும்.
'இந்த முறை பட்ஜெட் முடிந்து, 12 நாட்களை கடந்தும் வெளியிடப்படவில்லை. அது வந்தால் மட்டுமே, அடுத்தகட்ட நிதி ஒதுக்கீடு விபரங்களை பார்த்து, பணிகளை மேற் கொள்ள முடியும்' என்றனர்.
ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 2017ல் முதல் ரயில்வே பட்ஜெட், மத்திய பொது பட்ஜெட்டுடன் இணைத்தபிறகு, ரயில்வேக்கு என, பல திட்டங்கள் அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
'பிங்க் புக்'கை உடனே வெளியிட்டால், நிதி விபரங்களை பார்த்து, மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு, சம்பந்தப்பட்ட மாநில எம்.பி.,க்கள் லோக்சபாவில் கேள்வி எழுப்புவர்.
இதை தவிர்க்க, தாமதம் செய்து வருவதாக கருதுகிறோம். லோக்சபா கூட்டம் முடிந்துள்ளதால், ஓரிரு நாட்களில், 'பிங் புக்' வெளியிட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.