ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : அக் 17, 2024 01:32 AM
சென்னை:ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில், ஓய்வு பெற்றவர்களை தற்காலிகமாக மீண்டும் பணியமர்த்தும் முடிவுக்கு, தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ரயில்வேயில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இவற்றில் ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வாரியம், பொது மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு:
ரயில்வேயில் பாயின்ட்ஸ் மேன், லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பாளர், பொறியாளர், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில், 65 வயதுக்கு உட்பட்ட, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை, ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் நியமிக்கலாம்.
பணி ஓய்வுக்கு, முந்தைய ஐந்து ஆண்டுகள், வேலையில் நன்னடத்தை சான்று பெற்றிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை நியமிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில்வேயின் இந்த முடிவுக்கு, பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து, எஸ்.ஆர்.இ.எஸ்., சங்க பொதுச் செயலர் சூர்யபிரகாஷ் கூறுகையில், ''ஓய்வுபெற்ற பணியாளர்களை, மீண்டும் நியமிக்கக் கூடாது. இது, வேலை தேடும் இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ரயில் விபத்துகள் நடக்கும் நிலையில், ஓய்வுபெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது சரியான முறையாக இருக்காது,'' என்றார்.
டி.ஆர்.இ.யு., ரயில்வே தொழிற்சங்க முன்னாள் தலைவர் மனோகரன் கூறுகையில், ''ரயில்வேயில் பல்வேறு விபத்துகளுக்கு காலியிடங்களும், கூடுதல் பணிச்சுமையும் முக்கிய காரணமாக உள்ளது.
''இதற்கு உடனடி தீர்வாக, ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதை ஏற்க முடியாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்,'' என்றார்.