டிஜிட்டல் கடிகாரம் வடிவமைப்பு போட்டி ரயில்வே அறிவிப்பு
டிஜிட்டல் கடிகாரம் வடிவமைப்பு போட்டி ரயில்வே அறிவிப்பு
ADDED : மே 02, 2025 08:31 PM
சென்னை:ரயில்வே நிர்வாகம், புதிய டிஜிட்டல் கடிகாரம் வடிவமைப்புக்கான, தேசிய அளவிலான போட்டியை அறிவித்துள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் சிறந்த வடிவமைப்புக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பரத்துறை செயலர் திலீப் குமார் கூறியதாவது:
நாடு முழுதும் ரயில் நிலையங்களில் நிறுவப்பட உள்ள, புதிய டிஜிட்டல் கடிகாரங்களுக்கான வடிவமைப்பை தேர்வு செய்ய, தேசிய அளவிலான போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. படைப்பாற்றல் மிக்க நபர்களிடம் இருந்து வடிவமைப்புகளை வரவேற்கிறோம். தொழில் முறை நிபுணர்கள், கல்லுாரி, பல்கலை மற்றும் பள்ளி மாணவர்கள் என, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்கும்.
இந்திய ரயில்வேயின் அனைத்து நிலையங்களிலும் பயன்படுத்த தேர்ந்தெடுக்கப்படும் வடிவமைப்புக்கான, முதல் பரிசாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். கூடுதலாக, ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து சிறப்பு பரிசுகளாக தலா, 50,000 ரூபாய் வழங்கப்படும். இதில், பங்கேற்க விரும்புவோர், தங்கள் வடிவமைப்புகளை வரும், 31ம் தேதிக்குள், contest.pr@rb.railnet.gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனைத்து வடிவமைப்புகளும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வடிவமைப்பிற்கும், அதை பற்றிய சுருக்கமான விளக்கத்தை இணைக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் பல வடிவமைப்புகளை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.