ADDED : பிப் 27, 2026 06:19 AM

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக துாத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதிகளில் தலா, 7 செ.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணை, சிற்றாறு பகுதிகளில் தலா, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலையில், இன்று அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகாலையில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

