ADDED : அக் 13, 2025 06:25 AM

சென்னை: 'கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட, 11 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் அவினாசியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, கரூர் மாவட்டம் ஆனைப்பாளையத்தில், தலா, 8 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 18 வரை மிதமான மழை தொடரும்.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.