தமிழகம், புதுச்சேரியில் 7ம் தேதி வரை மழை நீடிக்கும்
தமிழகம், புதுச்சேரியில் 7ம் தேதி வரை மழை நீடிக்கும்
ADDED : நவ 03, 2024 12:11 AM
சென்னை:தமிழகத்தில் இன்று, பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் கரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 7ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கடலோரப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியாறு, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதிகளில், தலா 7 செ.மீ., மழை பதிவானது. ராமநாதபுரத்தில், 6 செ.மீ., மழை பெய்து உள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.