நெமிலி பெட்ரோல் குண்டுவீச்சில் ராமதாஸ் அபாண்டம்: திருமாவளவன்
நெமிலி பெட்ரோல் குண்டுவீச்சில் ராமதாஸ் அபாண்டம்: திருமாவளவன்
ADDED : ஜன 19, 2025 02:48 AM
சென்னை:'நெமிலி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கும், வி.சி.,க்கும் எவ்விததொடர்பும் இல்லை' என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த திருமால்பூரில், பா.ம.க.,வினர் மீது, அப்பகுதியை சேர்ந்தவர்கள், பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், உடல் முழுதும் தீக்காயம் ஏற்பட்டு, இரண்டு பேர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களை, பா.ம.க., தலைவர் அன்புமணி சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், 'தாக்குதலில் ஈடுபட்டவர்கள், வி.சி., கட்சியை சார்ந்தவர்கள்; அவர்கள் ஜாதி வெறியுடன், பா.ம.க.,வினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், 'தாக்குதலில் ஈடுபட்டவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை' என, திருமாவளவன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து, வி.சி., தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.
பா.ம.க., நிறுவனரும், அதன் தலைவரும் இதை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்க முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வி.சி.,க்கு எதிராக பா.ம.க., பரப்பும் வதந்தியை, பொது மக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

