திருமண விழாவில் ராமதாஸ் - அன்புமணி நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தனர்
திருமண விழாவில் ராமதாஸ் - அன்புமணி நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தனர்
ADDED : டிச 15, 2025 06:20 AM

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க., துணை பொதுச்செயலருமான ஏ.கே.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் , பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., தலைவர் அன்புமணி இருவரும் பங்கேற்றபோதும், நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தனர்.
ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஓராண்டாக மோதல் நிலவுவதால், பா.ம.க.,வினர் இரு பிரிவாகச் செயல்படுகின்றனர். அன்புமணியை கட்சித் தலைவராக தேர்தல் கமிஷன் அங்கீகரித்ததற்கு எதிராக, டில்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
நடுநிலை
இந்நிலையில், ஏ.கே.மூர்த்தியின் மகன் விஜய் மகேஷ் திருமணம், சென்னையில் நேற்று நடந்தது. அதில், ராமதாஸ் தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பின், திருமண விழாவிற்கு தன் மனைவி சவுமியா மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் அன்புமணி வந்து, மண மக்களை வாழ்த்தினார்.
மணமக்களை வாழ்த்தி விட்டு, மேடையிலிருந்து கீழே இறங்கிய பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணியும், மேடைக்கு ஏறச் சென்ற அன்புமணியும் நேருக்கு நேர் சந்தித்தனர். இருவரும் புன்னகைத்தபடி, ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
இது குறித்து, பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது: ஏ.கே.மூர்த்தி, ராமதாஸ் ஆதரவாளரா அல்லது அன்புமணி ஆதரவாளரா என தெரியாது. இரு அணிகளிலும் அவர் இருக்கிறார் என்பது தான் தெரியும். ராமதாஸ் குடும்ப சம்பந்தி என்பதால், அவர் நடுநிலை வகிக்கிறார். அதனால் தான், மூர்த்தியின் மகன் திருமணத்திற்கு, ராமதாஸ் , அன்புமணி இருவரும் வந்தனர்.
வணக்கம் ராமதாஸ், அன்புமணி இருவரின் பிரிவுக்கு, ஜி.கே.மணி தான் காரணம் என அன்புமணி தரப்பினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அன்புமணியும், ஜி.கே.மணியும் நேருக்கு நேர் சந்தித்தபோது வணக்கம் தெரிவித்துள்ளனர். இது, தந்தை - மகன் உறவில் மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

