சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய ராமதாஸ் கோரிக்கை
சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய ராமதாஸ் கோரிக்கை
ADDED : மார் 29, 2025 05:05 AM
சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
பள்ளிக்கல்வித்துறையில், 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினர்.
அவை தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க முடியாது என்றும் அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க, அரசு மறுப்பது நியாயமற்றது.
மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்று தருவதற்காக, 2012-ம் ஆண்டில், 5,000 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தப்பட்டனர். இன்று வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
பணி நிரந்தரம் செய்தால், அரசுக்கு ஆண்டுக்கு 450 கோடி ரூபாய் மட்டுமே, கூடுதலாக செலவாகும். இதனால், 12,000 குடும்பங்கள் பயனடையும். எனவே, பகுதிநேர ஆசிரியர்களை, அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.