பா.ம.க., சின்னத்தை முடக்க மறுப்பு :ராமதாஸ் கோரிக்கை நிராகரிப்பு
பா.ம.க., சின்னத்தை முடக்க மறுப்பு :ராமதாஸ் கோரிக்கை நிராகரிப்பு
ADDED : மார் 26, 2026 11:14 PM
சென்னை:அன்புமணி தலைமையிலான பா.ம.க.வுக்கு, தேர்தல் கமிஷன் ஒதுக்கிய, 'மாம்பழம்' சின்னத்தை முடக்க, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. கட்சி பெயர், சின்னம் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்த, தடை விதிக்க கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணைக்கு தடை கோரி, அன்புமணி தரப்பு பொதுச்செயலர் வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராமதாஸ் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, ராமதாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், தடையை நீக்க மறுத்ததோடு, தேர்தலுக்கு பின் வழக்கு விசாரணையை எடுத்துக் கொள்ள வேண்டும்' என, உத்தரவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிவில் நீதிமன்றத்தை நாட, ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தியது.
அதை ஏற்று, மாம்பழம் சின்னத்தை முடக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, நிறுவனர் ராமதாசும், வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைக்க கோரி, வடிவேல் ராவணனும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இவற்றை விசாரித்த நீதிபதி தர்மபிரபு, ''வழக்கில் இணைக்குமாறு, பொதுச்செயலர் வடிவேல் ராவணன் கோரிய மனு ஏற்கப்படுகிறது. அதே நேரத்தில், மாம்பழம் சின்னத்தை முடக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி, ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சின்னம் விவகாரத்தில், தேர்தல் கமிஷனை அணுகி நிவாரணம் கோரலாம்,'' என உத்தரவிட்டார்.
==
