ADDED : ஏப் 23, 2025 12:50 AM
சென்னை:தமிழகத்தில், எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கிரஷர் மீதான கூடுதல் வரிகளை, தமிழக அரசு குறைக்க வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு, கன மீட்டருக்கு 90 ரூபாய் என்ற அளவில் விதிக்கப்பட்டு வந்த ராயல்டி கட்டணம், இப்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுவதால், ஒரு கன மீட்டர் கருங்கல்லுக்கான ராயல்டி கட்டணம், 165 ரூபாயாக உயர்ந்து விட்டது.
இதனால் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களும் வேலை இழக்கக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது.
எனவே, கனிமங்களுக்கு உயர்த்தப்பட்ட ராயல்டியை குறைக்கவும், புதிதாக விதிக்கப்பட்ட சிறு கனிம நில வரி விதிப்பை கைவிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

