ராமநாதசுவாமி கோவில் தரிசன கட்டணம்: தமிழக அரசு திரும்பபெற இ.பி.எஸ்., வலியுறுத்தல்
ராமநாதசுவாமி கோவில் தரிசன கட்டணம்: தமிழக அரசு திரும்பபெற இ.பி.எஸ்., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 10, 2025 08:44 PM

சென்னை: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் பாரம்பரிய தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய, இனி ரூ.200 கட்டணம் கட்டாயம் என்று அறிவுறுத்தலை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடி உள்ளது.
இனி ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறிவுறுத்தியிருப்பது உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.
மேலும் பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆண்டவன் அருளை பெருவதற்காக மனத்தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.