ராமேஸ்வரம் -- தலைமன்னார் பயணியர் கப்பல் இயக்க திட்டம் அமைச்சர் வேலு அறிவிப்பு
ராமேஸ்வரம் -- தலைமன்னார் பயணியர் கப்பல் இயக்க திட்டம் அமைச்சர் வேலு அறிவிப்பு
ADDED : ஏப் 02, 2025 02:13 AM
தமிழகம் முழுதும், 67,216 கி.மீ., நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்காண்டுகளாக, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 6,665 கோடி ரூபாயில், 831 கி.மீ., இருவழிச் சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. 2,916 கோடி ரூபாயில், 2,038 கி.மீ., இடைவழி சாலைகள், இருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது, 71 ரயில்வே மேம்பால பணிகள் நடந்து கொண்டிருந்தன. சில இடங்களில் நில எடுப்பு பணிகள் முழுமை பெறாமல் இருந்தன.
சிறப்பு நிலம் எடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணிகள் வேகப்படுத்தப்பட்டன; 36 பணிகள் முடிக்கப்பட்டன. மீதமுள்ள 35 பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில், 858 கோடி ரூபாயில் 25 புதிய ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. சாலை விபத்துகளை தடுக்க, 415 கரும்புள்ளி பகுதிகள் கண்டறியப்பட்டு, அதில், 408 மேம்படுத்தப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுமத்தின் வழிகாட்டுதலின்படி, சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடலுார், நாகை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி துறைமுங்களில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு, இந்தியாவிலேயே முதன்முறையாக பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு, பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்க, 118 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவியுடன் கப்பல் இயக்கப்படும்.
- வேலு
பொதுப்பணித் துறை அமைச்சர்