பிரதமர் மோடி வருகையால் தீவிர கண்காணிப்பில் ராமேஸ்வரம் விழா
பிரதமர் மோடி வருகையால் தீவிர கண்காணிப்பில் ராமேஸ்வரம் விழா
UPDATED : மார் 29, 2025 06:26 AM
ADDED : மார் 29, 2025 04:44 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதால் ராமேஸ்வரம் பகுதி தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விழா பந்தல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்.,6ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ராமநவமியான அன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதன் பின் திறப்பு விழா நிகழ்ச்சி கூட்டம் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் நடக்க உள்ளது.
இதற்காக விழா பந்தல், மேடை அமைக்க பிரம்மாண்ட இரும்பு சட்டங்கள்,வெப்ப சலனத்தை தாங்கும் கூரைகள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டு பந்தல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஏப்.,5ல் இலங்கை செல்லும் பிரதமர் மோடி ஏப்.,6ல் தனி விமானத்தில் மதுரை வருகிறார். பின் ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபம் வருகிறார். அங்கிருந்து காரில் ராமேஸ்வரம் வருகிறார். இதற்காக மண்டபம் ஹெலிபேட் தளத்தில் சிமென்ட் கலவை பூசி புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
![]() |
பாதுகாப்பு தீவிரம்
பிரதமர் வருகையையொட்டி அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க நேற்று முதல் பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை வீரர்கள் ரோந்து கப்பலில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.