ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்; ஸ்டிரைக் துவங்கியது
ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்; ஸ்டிரைக் துவங்கியது
ADDED : பிப் 18, 2024 11:54 PM

ராமேஸ்வரம் : -இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 4 மீனவர்களை விடுவிக்க கோரி நேற்று ராமேஸ்வரத்தில் விசைப்படகுகளில் மீனவர்கள் கருப்புக் கொடி ஏற்றி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர்.
பிப்.,2ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதில் பிப்.,16ல் மீனவர்கள் ராபர்ட், பெக்கர் இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனையும், மெல்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விதித்தது.
இதனால் மீனவர்கள் மூவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு கைதான ராமேஸ்வரம் மீனவர் நம்புமுருகன் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள், சிறை தண்டனை பெற்ற 4 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் கடலில் விசைப்படகுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் துவக்கினர்.
மேலும் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மண்டபம் மீனவர்கள் பிப்.,19 முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

