sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனைத்து படிப்பையும் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு: 'தினமலர்' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றே கடைசி

/

அனைத்து படிப்பையும் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு: 'தினமலர்' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றே கடைசி

அனைத்து படிப்பையும் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு: 'தினமலர்' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றே கடைசி

அனைத்து படிப்பையும் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு: 'தினமலர்' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றே கடைசி

1


ADDED : மார் 25, 2024 05:29 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : உயர்கல்விக்கு ஆலோசனை தரும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனைத்து வகை படிப்புகள் குறித்தும் கல்வியாளர்களிடம் ஆலோசனை பெற, இன்று(மார்ச் 25) அரிய வாய்ப்பாகும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சேர்வதற்கான ஆலோசனைகளை வழங்க, 'தினமலர்' நாளிதழ் சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன், கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சி, நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கில், கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில், பிளஸ் 2வுக்கு பின், என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்ற குழப்பங்களுக்கு தீர்வு காண, மாணவர்களும், பெற்றோரும் ஆர்வமாக குவிந்தனர்.

நேற்று இரண்டாம் நாளாக, உயர்கல்வி கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது. இதில், கல்வியாளர்கள் பங்கேற்று, மாணவர்களின் உயர்கல்வி சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

காமர்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் படிப்புகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., செயற்கை நுண்ணறிவு படிப்புகள், 21ம் நுாற்றாண்டில் மாணவர்கள் வளர்க்க வேண்டிய திறன்கள், இன்ஜினியரிங் எதிர்காலம், மெஷின் லேர்னிங், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், உடனடி வேலை வழங்கும் படிப்புகள் ஆகியவை குறித்து, கல்வி ஆலோசகர்கள் விரிவான விளக்கம் அளித்தனர்.

உயர்கல்வி படிப்புகள் குறித்த மாணவர்களின் ஆர்வங்களை அறிந்து கொள்ளும் வகையில், அவர்களிடம் கேள்விகள் கேட்டு, சிறந்த பதில் அளித்தவர்களுக்கு, லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்பட்டன.

இன்று மூன்றாம் நாளுடன் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையில், கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடக்கிறது.

பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர், அனைத்து வகை படிப்புகள் குறித்தும், ஆலோசனைகளை நேரில் பெற இன்றைய நிகழ்ச்சியை தவறவிடாமல், தெரிந்து கொள்ள அரிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

எல்லா தகவலும் கிடைக்கும்

 கருத்தரங்கு மற்றும் கண்காட்சியிலும், கல்வியாளர்களும், கல்வி நிறுவன பிரதிநிதிகளும், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க உள்ளனர் 80க்கும் மேற்பட்ட கல்லுாரி அரங்குகளில் படிப்புகள் குறித்து, விளக்கம் அளிக்கப்படுகிறது படிப்புகளின் விபரங்கள் அடங்கிய கையேடுகள் கல்லுாரி அரங்குகளில் வழங்கப்படும். கல்லுாரிகளின் சேர்க்கை குறித்த சந்தேகம் தீர்க்கப்படும் ஒவ்வொரு படிப்புக்கும் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் விண்ணப்பிக்கும் முறை, கல்வி, விடுதி கட்டணம் உட்பட அனைத்து விபரங்களையும் ஓரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.



திறன் வளர்ப்பது அவசியம்'

மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார், 21ம் நுாற்றாண்டின் திறன் வளர்ப்பு குறித்து பேசியதாவது:எந்த படிப்பை தேர்வு செய்தாலும், அதற்கு வேலை உண்டு. பெரும் நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் கல்வித்தகுதியை எடுத்து பாருங்கள். அவர்கள் படித்த படிப்பு வேறு; அவர்கள் பணியாற்றுவது வேறாக இருக்கிறது. அதனால், எந்த படிப்பை படித்தாலும், அத்துடன் உங்களுக்கான தனித்திறன்களை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். நீங்கள் படிப்பது வெறும் வேலைக்கு மட்டுமல்ல. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் படிப்பாக அது இருக்க வேண்டும். சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும்.படிக்கும்போது, அந்த படிப்பின் மீது உங்கள் கவனம் இருக்க வேண்டும். மொபைல்போனில் தேவையில்லாத விஷயங்களை பார்த்து, நேரத்தை வீணடிக்காதீர். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் அல்லாத இன்னொரு வெளிநாட்டு மொழி என, பல மொழிகளை பேச தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான், வேலைவாய்ப்புக்கான நேர்காணல்களில் பங்கேற்கும் தகுதியை வளர்க்கும். எந்த பட்டப்படிப்பு முடித்தாலும், ஐ.டி., நிறுவனங்களில் சேர, 'கோடிங்' திறன் வளர்த்து கொள்ள வேண்டும். குழுவாக இணைந்து பணியாற்ற பழகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



கொட்டி கிடக்கும் காமர்ஸ் படிப்புகள்

வழிகாட்டி நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜன் பேசியதாவது:பி.காம்., - பி.பி.ஏ., ஆகிய காமர்ஸ் மற்றும் மேலாண்மை படிப்புகளை பொறுத்தவரை, இன்றைய காலங்களில், 20க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் வந்துவிட்டன.பி.காம்., படிப்பில், ஜெனரல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், அக்கவுன்டிங், இ -காமர்ஸ், மார்க்கெட்டிங், வங்கி செயல்முறை என, எத்தனையோ பிரிவுகள் வந்துவிட்டன. பி.காம்., படித்து கொண்டே, சி.ஏ., படிப்பிலும் சேரலாம். கல்லுாரியில் படிக்கும்போதே, சி.ஏ., ஆடிட்டிங் படிப்புகளில், அடிப்படை தேர்வு மற்றும் இடைப்பட்ட தேர்வு ஆகியவற்றை எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். பட்டப்படிப்பை முடித்தபின், சி.ஏ., இறுதி தேர்வுக்கு தயாராகி எழுதி கொள்ளலாம்.பி.பி.ஏ., படிப்புக்கும் அதிக வரவேற்பு உள்ளது. இதில், எம்.பி.ஏ., முடித்தால், பெரிய நிறுவனங்களின் நிர்வாக பொறுப்புகளை பெறலாம். பி.பி.ஏ., மற்றும் பி.காம்., முடித்தவர்களுக்கு, பல தனியார் நிறுவனங்கள் தனித்தனியாக, 'அப்ரெண்டிஸ்' என்ற தொழில் பழகுனர் பயிற்சி வழங்குகின்றன. இதற்கு கல்வி உதவி தொகையும் கிடைக்கும்.அதேபோல், லாஜிஸ்டிக்ஸ் துறையும் சமீபகாலமாக அபார வளர்ச்சி பெற்றுள்ளது. பி.பி.ஏ., லாஜிஸ்டிக்ஸ் படிப்புக்கு அதிக மவுசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



இன்று ஆலோசனை

தரும் கல்வியாளர்கள் இன்றைய வழிகாட்டி நிகழ்ச்சியின் கருத்தரங்கில், கலை, அறிவியல் படிப்புகள் குறித்து, பேராசிரியர் திருமகன் பேச உள்ளார். வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பம் குறித்து, 'கோப்ரூகல்' நிறுவனர் குமார் வேம்பு, கரியர் கவுன்சிலிங் குறித்து, கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் பேச உள்ளனர்.வேலைவாய்ப்பு திறன்கள் குறித்து, ஜோஹோ நிறுவன மனிதவள பிரிவு தலைவர் சார்லஸ் காட்வின், நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் என்ற தலைப்பில், இந்திய பாதுகாப்புத்துறையின் விஞ்ஞானி டில்லிபாபு பேச உள்ளனர்.மாணவர்கள் மற்றும் பெற்றோரின், உயர்கல்வி குறித்த தனிப்பட்ட கேள்விகளுக்கு, கல்வியாளர்கள் நேரடியாக பதில் அளிக்க உள்ளனர். இதில் சிறந்த கேள்வி கேட்பவர்கள் மற்றும் சிறந்த பதில் அளிக்கும் மாணவர்களுக்கு, லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் டேப்லெட் பரிசாக வழங்கப்படும்.



மாற்றங்களுக்கு ஏற்ப தரம் உயர்த்துவது முக்கியம்

ராஜலஷ்மி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் பேராசிரியர் சுந்தர், இன்ஜினியரிங் எதிர்காலம் குறித்து பேசியதாவது:எந்த இன்ஜினியரிங் படிப்பில் சேர்வது என்பது, மாணவர்களுக்கு குழப்பமாக உள்ளது. இதற்கு, நம்முடைய தகுதிகளை, எந்த அளவுக்கு வளர்த்து கொள்கிறோம் என்பதில்தான் உங்களின் வெற்றி உள்ளது. மாணவர்கள் தங்களுக்கான தனிப்பட்ட நிபுணத்துவத்தை வளர்த்து கொள்ள வேண்டும். சமீபகாலமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகரித்து வருகிறது. அதனால், வேலைவாய்ப்புகள் குறைந்து விடுமா என்ற அச்சம் உள்ளது. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றபோது, இந்த பயம் இருந்தது. ஆனால், கம்ப்யூட்டர் வந்தபின், உண்மையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. அப்படித்தான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இருக்கும். தொழில்துறையிலும், வேலைவாய்ப்பிலும் போட்டிகள் அதிகரித்துள்ளதாக நினைக்கிறோம். ஆனால், நாம், நம்முடனே போட்டி போட்டு, நமக்கான தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும். கல்வி, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நம்மை தரம் உயர்த்தி கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, படிப்பிலும், வாழ்க்கையிலும் சிறந்த எதிர்காலத்தை அமைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us