ADDED : ஜன 24, 2026 05:50 AM
புதுடில்லி,:ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களை பெறுவோருக்கு, டில்லி மாநில அரசு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப வினியோகம் செய்ய உள்ளது. அதுபோல, பொதுவான இட ஒதுக்கீடு மற்றும் தகுதியின் அடிப்படையில் ரேஷன் கார்டுகளை வழங்கவும், முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டில்லியில், 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' எனும் கருவி வாயிலாக, 'ஆதார்' அடையாள எண் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இப்போதைய முறைப்படி, மாநிலம் முழுமைக்கும் ஏற்றவாறு, பொதுவான முறையில் உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதை மாற்றி, அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள்தொகை, இட ஒதுக்கீடு, அவர்களின் தகுதி அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, முதல்வர் ரேகா குப்தா தலைமையில் உயர் மட்ட கூட்டம் நடந்தது. அதில், ரேஷன் கடைகளில் இலவசமாக உணவுப் பொருட்கள் வாங்குவதற்கான தனிநபர்களின் வருமானத்தை, 1 லட்ச ரூபாயிலிருந்து, 1.20 லட்ச ரூபாயாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய கணக்கெடுப்பின் படி, டில்லி மாநிலத்தில், 23,394 போலி ரேஷன்கார்டுகள் உள்ளன.
எந்த பொருட்களையும் வாங்காத 95,682 அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த கூட்டத்தில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, அந்தந்த மாவட்டங்களில் முடிவெடுக்க, மாவட்ட துணை கலெக்டர் தலைமையில் குழு அமைக்கவும், முதல்வர் தலைமையில் கூடிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

