ஒரே மேடையில் நேரடி விவாதத்துக்கு தயாரா? திருச்சி மாநாட்டில் இ.பி.எஸ்., 'பரபர' பேச்சு!
ஒரே மேடையில் நேரடி விவாதத்துக்கு தயாரா? திருச்சி மாநாட்டில் இ.பி.எஸ்., 'பரபர' பேச்சு!
UPDATED : மார் 25, 2024 04:03 AM
ADDED : மார் 25, 2024 12:12 AM

திருச்சி:''ஒரே மேடையில், நானும் மைக் பிடித்து பேசுகிறேன்; நீங்களும் பேசுங்கள். உண்மையை, உங்களால் சொல்ல முடியுமா? நீட்தேர்வை கொண்டு வந்தது யார் என்பதை ஆதாரத்துடன்காட்டுகிறேன்,'' என, தி.மு.க.,வுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., நேற்று சவால் விட்டார்.
திருச்சியில் நேற்று, அ.தி.மு.க., - தே.மு.தி.க., - புதிய தமிழகம், - எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடந்தது.
அதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசியதாவது:
அ.தி.மு.க., தலைமையிலும், தி.மு.க., தலைமையிலும், பா.ஜ., தலைமையிலும் கூட்டணிகள் அமைந்து, தேர்தலை சந்திக்கின்றன. ஆனால், போட்டி என்று வரும் போது, அ.தி.மு.க.,வா, தி.மு.க.,வா என்பதை இந்த நாடு அறியும்; நாட்டு மக்கள் அறிவர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு, மக்கள் ஆதரவோடு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சரக்கில்லையே!
கடந்த மூன்று நாட்களாக நடக்கும் கூட்டங்களில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வையும் என்னை பற்றியும் விமர்சிக்கிறார். வேறு எதுவும் பேசுவதில்லை. சரக்கு இருந்தால் தானே பேசமுடியும். ஒன்றுமேஇல்லையே!
பொம்மை முதல்வரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
தமிழகத்தை குட்டிச்சுவராக்கி கெடுத்து விட்டோம் என்கிறார்.எம்.ஜி.ஆர்., இந்த மண்ணில் பிறந்த காரணத்தால் தமிழகம் தப்பியது. உங்கள் குடும்பத்திடம் இருந்து தப்பிக்க வைத்தவர்எம்.ஜி.ஆர்., அதைகாத்தவர் ஜெயலலிதா.
அவர்கள் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்தோம். அதனால், இன்றைக்கும் அ.தி.மு.க., ஆட்சியை பொற்கால ஆட்சிஎன்கின்றனர்.
மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சி அலங்கோல ஆட்சி; மக்கள் விரோத ஆட்சியாகத் தான் மக்கள் பார்க்கின்றனர். மூன்று ஆண்டுகளில், நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லுாரிகளை கொண்டு வந்தது. ஆறு சட்டக் கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டன. வேளாண்மை, கால்நடை மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளை கொண்டு வந்து, தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக்கி இருக்கிறோம்.
நாங்களா தமிழகத்தை கெடுத்தோம்? மூன்று ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லுாரி கொண்டு வர முடிந்ததா? முதல்வராக இருந்த ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது.
திராணி, தில்லு இல்லை
உதயநிதி மூன்று ஆண்டுகளாக, ஒரு செங்கல்லைத் தான் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த செங்கல்லை பார்லிமென்டில் காட்ட வேண்டும். வெளியே காட்டி பிரயோஜனம் இல்லை.
விளம்பரத்துக்காக செங்கல்லை காட்டிக் கொண்டிருக்கும் கதையை மாற்றுங்கள். இதையே காட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
கடந்த தேர்தலில், 38 பேரை, லோக்சபா உறுப்பினர்களாகும் வாய்ப்பை கொடுத்தனர். இந்த செங்கல்லை அங்கே கொண்டு போய் காட்ட வேண்டியது தானே! 38 பேரும் லோக்சபாவில் காட்டி, எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி இருக்கலாம். அதற்கு தில்லு, திராணி, தெம்பு இல்லை.
கேட்க வேண்டிய இடம் பார்லிமென்ட். அங்கு பெஞ்சை தேய்த்து விட்டு, வாய் மூடி மவுனம் சாதித்து விட்டு, இங்கு வந்து செங்கல்லை துாக்குகின்றனர்.
உண்மையிலேயே மருத்துவமனை கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தால், லோக்சபாவில் குரல் கொடுத்திருக்க வேண்டும். அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதை செய்ய துணிவில்லை. இங்கு வந்து செங்கல்லை வைத்து வித்தை காட்டுகின்றனர்.
மக்கள் என்ன, குடுமி வைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?
தமிழக மக்கள் அறிவாளிகள்; விபரமானவர்கள். அவர்கள், நீங்கள் சொல்வதை நம்பத் தயாராக இல்லை.
மாறி மாறி பொய் பேச்சு
நீட் தேர்வை யார் கொண்டு வந்தது? நீயும் மைக் பிடி, நானும் மைக் பிடிக்கிறேன்; பேசு. யாருடைய ஆட்சியில், 'நீட்' கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது.
கடந்த 2010 டிசம்பர் 21ம் தேதி, காங்கிரஸ் ஆட்சியில் அரசிதழில் வெளியிடுகின்றனர். தி.மு.க.,வைச் சேர்ந்த நாமக்கல் காந்தி செல்வன் இணை அமைச்சராக இருக்கும் போது கொண்டு வந்தது தான், 'நீட்' தேர்வு.
அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மாறி மாறி பொய்யை பேசி மக்களை ஏமாற்றும் கட்சி, திராவிட மாடல் என்று சொல்லும் தி.மு.க., கட்சி.
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, மருத்துவக் கல்லுாரிகளில் மொத்தம் உள்ள 3,145 இடங்களில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு வெறும் ஒன்பது இடங்கள் மட்டுமே கிடைத்தது. எதிர்க்கட்சியோ, மக்களோ கோரிக்கை வைக்கவில்லை.
ஆனாலும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடனும், சட்ட வல்லுனர்களுடனும் கலந்து ஆலோசித்து, சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றேன்.
அதன் வாயிலாக, அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவியருக்கு மருத்துவக் கல்லுாரிகளில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியது அ.தி.மு.க., அரசு. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த 2,160 பேர் மருத்துவம் படிக்கின்றனர். இது தான் எங்கள் சாதனை.
சர்க்கரை என்று சொன்னால் போதாது; வாயில் போட்டால் தான் இனிக்கும். வெற்று அறிவிப்புகள் வாயிலாக நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் மக்களுக்கு சேவை செய்திருக்கிறோம்; நன்மைசெய்திருக்கிறோம்.
சாதனைகளை படைத்த அரசை பார்த்து, 10 ஆண்டுகளாக கெடுத்து விட்டதாக வாய் கூசாமல் சொல்கிறீர்கள். மக்களுக்கான ஒரு சாதனையையாவது உங்களால் சொல்ல முடியுமா?
குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனியில் இருப்பவர்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து அங்கேயும் கொள்ளையடிக்க வேண்டும்; இங்கேயும் கொள்ளையடிக்க வேண்டும். அதற்காகத் தான், இவ்வளவு கஷ்டப்பட்டு ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க., ஆட்சியில் சாலைகள், பாலங்கள், அணைக்கட்டுகளை கட்டியிருக்கிறோம். அவருக்கு சரியாக கண் தெரியவில்லையோ என்னவோ! இல்லாவிட்டால் இப்படி பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
காவிரி தண்ணீர் எங்கே?
கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறந்தனர். தண்ணீர் பற்றாக்குறையால், டெல்டாவில் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீர்இன்றி கருகி விட்டன.
அந்த நேரத்தில், 'இண்டியா' கூட்டணி அமைத்து, பெங்களூருவில் முதல் கூட்டம் நடக்கிறது. அதில், பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், கர்நாடகா முதல்வரிடமோ, அமைச்சரிடமோ, 'காவிரி தண்ணீர் திறந்து விடுங்கள்' என்று வேண்டுகோள் வைக்கவில்லை.
நாங்களா கொடுத்தோம்?
அவருக்கு அதிகாரம் தான் முக்கியம்; நாட்டு மக்கள் முக்கியமல்ல. அதனால் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகி வீணாப் போச்சு. அந்த விவசாயி வடிக்கும் கண்ணீர், இந்த தேர்தலில் உங்களுக்கு தோல்வியை கொடுக்கும்.
ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்த விவசாயிகளின் துடிப்பை உணரும் ஈர நெஞ்சம் அவர்களுக்கு இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் கொடுக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியையும் முழுமையாக கொடுக்கவில்லை.
பச்சை துண்டு போட்டுக் கொண்டு, பச்சை பொய் பேசுவதாக சொல்கிறார். யார் பச்சை பொய் பேசுவது, சொல்லுங்கள் நானா, ஸ்டாலினா?
ஸ்டாலின் அமைச்சராக இருந்த போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்து, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம். நாங்களா தமிழகத்தை கெடுத்தோம்.
தமிழகத்துக்கும், தமிழக விவசாயிகளுக்கும் துரோகம் செய்யும் ஸ்டாலினுக்கு வரும் லோக்சபா தேர்தலில், தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.,கட்சியுடனும் கூட்டணி வைத்து, மத்தியில் ஆட்சியில் இருந்த 12 ஆண்டுகளில், தி.மு.க.,வினர், தமிழகத்துக்கு எந்த திட்டத்தை கொண்டு வரவில்லை.
என்ன செய்தார்?
குடும்ப உறுப்பினர்களை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்து, தமிழகத்துக்கு துரோகம் செய்தது தி.மு.க., எனவே, இவர்கள் மீண்டும் எம்.பி.,க்களானால் என்ன செய்யப் போகின்றனர்?
கடந்த, 2014ல், நதிநீர் பிரச்னைக்காக, தமிழகத்தின் உரிமையை பெறுவதற்காக, 37 அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஒன்று சேர்ந்து, 22 நாட்கள் பார்லிமென்ட்டை ஒத்திவைக்கும் நிலையை ஏற்படுத்தினர். அந்த அழுத்தத்தால் தான் காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் மேலாண்மை குழுவை மத்திய அரசு அமைத்தது.
அ.தி.மு.க., கூட்டணியினர், எம்.பி.,க்களானால், தமிழக மக்களின் உரிமையை காப்போம். தமிழகத்துக்கு தேவையான நிதியை பெறுவோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குவோம்.
போதை மாநிலமானது ஏன்?
தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறியதற்கு தி.மு.க.,வும், தி.மு.க., நிர்வாகிகளும் தான் காரணம்.
தி.மு.க.,வில் 686 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளனர். நீங்கள் ஊழலை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். 2026ல் அ.தி.மு.க., ஆட்சி மலரும்.
அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவதாக மிரட்டி எங்களை பணிய வைக்க முடியாது. நான் நினைத்திருந்தால், நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த போது, எத்தனை வழக்கு போட்டிருக்க முடியும். இப்போது, அத்தனை ஊழல்களையும் சேகரித்து வைத்துள்ளேன்.
வரும், 2026ல் ஆட்சிக்கு வரும் போது பாருங்கள். அ.தி.மு.க.,வை பொருத்தவரை, மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. இந்த தேர்தலோடு தி.மு.க., என்ற கட்சி காற்றோடு கரைய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

