ADDED : பிப் 27, 2024 07:56 AM
மதுரை : 'கோரிக்கைகளை நிறைவேற்ற உயரதிகாரிகள் காலதாமதம் செய்வதால் காலவரையற்ற போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்' என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன், பொதுச்செயலார் சங்கரலிங்கம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்கள் சங்க மத்திய செயற்குழு கூட்ட முடிவின்படி இன்று (பிப்.27) முதல் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு, உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.சில நாட்களாக நடந்து வரும் போராட்டத்தால் தேர்தல் பணிகள், பொதுமக்களுக்கான சேவைகள், அரசின் திட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. கடந்தாண்டு மேயில் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் வருவாய் அலுவலர்களின் கோரிக்கைகள் மீது சுமுக தீர்வு காணப்பட்டது.
ஆனால் பத்து மாதங்களாக அரசு ஆணைகள் வழங்க காலதாமதம் செய்யப்படுவதே இப்போராட்டத்திற்கு காரணம். முதல்வர் உத்தரவிட்ட பின்னும் உயர் அலுவலர்கள் தாமதம் செய்வது ஏன்.
வருவாய்த்துறையில் பதவி உயர்வு பட்டியல்கள் திருத்தம் காரணமாக பணியிறக்கம் பெற்றோருக்கான பணிபாதுகாப்பு அரசாணை 10 மாதங்களாக தாமதப்படுத்தப்படுகிறது.
இதற்கிடையே 4 பேர் மனஅழுத்தத்தால் இறந்துவிட்டனர்.
இதுஅரசு நிர்வாகத்தின் மெத்தனத்தை காட்டுகிறது.
இளநிலை உதவியாளர், உதவியாளர்களை இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் என பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட்டும், 8 ஆண்டுகளாக விதித்திருத்தம் செய்ய அலைக்கழிப்பு செய்வது எங்கள் உணர்வை கொச்சைப்படுத்துகிறது.
முதல்வரின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்டத்திற்கு ஒரு முகாமிற்கு ரூ.1 லட்சம் நிதிஒதுக்கீடு வழங்காதது கால அவகாசம் வழங்காததால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். துறை அலுவலர்களின் பயிற்சி, பதவி உயர்வு, கொரோனா கால உயிரிழப்புக்கு நிவாரணம் என அனைத்தையும் போராடியே பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு கூறியுள்ளனர்.
