செஞ்சியை சிவாஜி கோட்டையாக அங்கீகரிப்பது கொடுஞ்செயல்: ராமதாஸ் கண்டனம்
செஞ்சியை சிவாஜி கோட்டையாக அங்கீகரிப்பது கொடுஞ்செயல்: ராமதாஸ் கண்டனம்
ADDED : ஜூலை 17, 2025 11:05 AM
சென்னை: 'செஞ்சியை மராட்டிய மாமன்னர் சிவாஜியின் கோட்டையாக, யுனைஸ்கோ அடையாளப்படுத்தி இருப்பது, வரலாற்றை சிதைக்கும் கொடுஞ்செயல்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
காடவ மன்னர்கள் கட்டிய செஞ்சிக் கோட்டையை, மராட்டிய மாமன்னர் சிவாஜி கட்டிய, 12 கோட்டைகளில் ஒன்றாக, 'யுனெஸ்கோ' நிறுவனம் அடையாளப்படுத்தியிருப்பது வரலாற்றை சிதைக்கும் கொடுஞ்செயல்.
ஏற்கனவே, பாடநூல்களில், அகழாய்வுகளில், தமிழர்களின் அடையாளத்தை சிதைக்கும் பணியை சிரமேற்கொண்டு, மத்திய அரசு செய்து வந்திருக்கிறது. கி.பி., 12ம் நுாற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி ஓட்டக்கூத்தர் இயற்றிய, 'மூவருலா', காடவ அரசனால் செஞ்சி கோட்டை கட்டப்பட்டதை கூறுகிறது.
வன்னிய குலத்தில் தோன்றிய காடவ அரசர்கள் என்போர், சோழர்களின் உறவினர். இதுதான் அடிப்படையான சான்றுகளைக் கொண்ட வரலாறு. தஞ்சை பெரிய கோவில் சோழர்களின் கோவில் என்று அறியப்படுவதைப் போல, செஞ்சிக் கோட்டையும், காடவ மன்னர்களின் கோட்டை என்று, வரலாற்றில் அறியப்பட வேண்டும்.
செஞ்சிக் கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என்று கூறுவது வரலாற்று பிழை மட்டுமல்ல, அடுத்த தலைமுறையை திட்டமிட்டு ஏமாற்றும் சதி வேலை.
மாமன்னர் சிவாஜியின், 12 கோட்டைகளில் ஒன்று என செஞ்சிக் கோட்டையை யுனைஸ்கோ அங்கீகரித்துள்ளதை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருப்பது வேதனை அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இதை செய்திருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

