UPDATED : ஜூலை 12, 2025 02:32 AM
ADDED : ஜூலை 12, 2025 12:16 AM

சென்னை:பல்வேறு மாவட்டங்களில் உள்ள 1,000 ஆண்டு கள் பழமையான 63 கோவில் களை புனரமைக்கும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான 714 கோவில்கள் கண்டறியப்பட்டு, அவற்றை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள் 2022 - 23ம் ஆண்டு துவங்கின. இப்பணிக்கு 425 கோடி ரூபாயை அரசு வழங்கிஉள்ளது.
அரசு, உபயதாரர்கள், கோவில் நிதி என, மொத்தம் 571 கோடி ரூபாய் செலவில், 352 கோவில்கள் புனரமைப்பு பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை, 60 கோவில்களில் கும்பாபிஷேகம் முடிந்துள்ளது.
இதை தொடர்ந்து, காஞ்சிபுரம், பச்சை வண்ணர் பவள வண்ணர், அழகிய சிங்கபெருமாள், திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி பானம்பாக்கம் ஜெனனமேஜெயீஸ்வரர், செங்கல்பட்டு மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர், ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் திருக்குகேஸ்வரர் உள்ளிட்ட 63 கோவில்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.
இதன் மூலமாக கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவில்களின் தொன்மை மற்றும் கட்டடக் கலை குறித்து, வருங்கால தலைமுறையினர் அறிய முடியும்.
இக்கோவில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இந்த கோவில்களை புனரமைக்கும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம், ஹிந்து அறநிலையத்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.