ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: 4 பேரிடம் விசாரணை
ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: 4 பேரிடம் விசாரணை
UPDATED : மார் 21, 2024 03:44 AM
ADDED : மார் 21, 2024 01:09 AM

சென்னை,:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்த, அரபி கல்லுாரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் என, நான்கு பேரை, 10 நாட்கள் காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்.,23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட, அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் பலியானார்.
இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
முதலில், ஜமேஷா முபின் கூட்டாளிகள், 11 பேரை கைது செய்தனர். இவர்களின் வீடுகளில் நடந்த சோதனையில், ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கின.
இவற்றை ஆய்வு செய்த போது, சென்னை மற்றும் கோவையில் உள்ள, அரபிக் கல்லுாரியில், முஸ்லிம் இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்படுவது தெரியவந்தது.
இது தொடர்பாக, பிப்ரவரியில், 21 இடங்களில் சோதனை செய்து, சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜமீல் பாஷா உமரி, 55; கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது ஹுசைன் பைசி, 38; கோவை குனியமுத்துார் இர்ஷாத், 32; பொள்ளாச்சி சையது அப்துர் ரஹ்மான் உமரி, 52, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், சையது அப்துர் ரஹ்மான் உமரி, அரபி கல்லுாரி முன்னாள் பேராசிரியர் உள்ளிட்டோர், சென்னை மற்றும் கோவையில் உள்ள, அக்கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.
சையது அப்துர் ரஹ்மான் உமரியிடம், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் தொடர்பான புத்தகங்கள், நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது தொடர்பான திட்டங்கள் குறித்த ஆவணங்கள் இருந்தன.
மற்ற மூவரிடமும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பான குறிப்புகள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

