ADDED : அக் 18, 2024 09:56 PM
ஊத்துக்கோட்டை:வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் கிருஷ்ணா நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வாயிலாக தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வருகிறது. துவக்கத்தில் வினாடிக்கு, 1,300 கன அடி நீர் திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் கிருஷ்ணா நீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 170 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இருப்பினும், தமிழக --- ஆந்திர எல்லையில் சாய்கங்கை கால்வாய் பகுதியில் பெய்து வரும் மழையால், கால்வாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக -- ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டிற்கு வினாடிக்கு 277.85 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது.
இது குறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் மழை பெய்து வருவதால், கிருஷ்ணா நீர் திறப்பின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது' என்றார்.

